உயர்கல்வி வளர்ச்சியில் இணையத்தின் பங்கு

ஒரு நாட்டின் முன்னேற்றத்தில் அந்நாட்டு மக்களின் உயர் கல்வி அறிவே பெரும் பங்கு வகிக்கிறது. கல்வி மனிதனைப் பண்படுத்துகிறது. நெறிப்படுத்துகிறது. கல்வி மனிதனின் உண்மைத் தேடலையும், வாழ்வின் இரகசியத்தையும் விளக்குகிறது. கல்வி, அறியாமை என்னும் இருட்டறையிலிருந்து மனிதனை வெளிச்த்திற்குக் கொண்டு வருகிறது. எனவே தான் பாண்டியன் அறிவுடை நம்பி, "உற்றுளி உதவியும் உருபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே" என்றும், "கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே" என்று ஒளவையாரும் கல்வியின் சிறப்பை எடுத்துரைக்கின்றனர். சுதந்திர இந்தியாவில் அடிப்படைக் கல்வி அனைத்துத் தரப்பு மக்களிடமும் சென்றடைய மத்திய, மாநில அரசுகள் செயல் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி வருகின்றன. இந்தியாவில் உள்ள 'அனைவருக்கும் கல்வி' (கட்டாயக் கல்வி) என்ற இலக்கை நோக்கி செயல் திட்டங்கள் செயல்படுத்தப் பட்டு வருகின்றன. ஆனால் உயர்கல்வியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடையவில்லை என்றே சொல்ல வேண்டும். இதற்கு முக்கியக் காரணம் ஆராய்ச்சியில் புதிய அறிவியல் கண்டு பிடிப்புகளைப் பயன்படுத்தப் பெறாமையே. உயர்கல்வி கற்கும் ஒரு மாணவன் பிற நாட்டு மாணவர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு வளரும் சூழல் இருந்த பொழுதும் அவனால் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்ட இயலவில்லை. உயர்கல்வி வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெறுவதற்கு இணையம் எவ்வெவ்வாறு பயன்படுகிறது என்று காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

எது (உயர்) கல்வி?

ஒரு மனிதன் எழுத்தறிவு பெறுவதன் மூலம் சிந்திக்கத் தொடங்குகிறான். எழுத்தறிவு என்பது ஒருவன் எழுதப் படிக்கத் தெரிந்தால் மட்டுமே முழுமைபெறாது. வளர்ந்து வரும் அறிவியல் உலகில், அவன் முழுமையான எழுத்தறிவு பெறக் கணினி பற்றிய அறிவு மிகவும் அவசியமாகிறது. அப்பொழுது தான் அவனுடைய எழுத்தறிவு முழுமை பெறுகிறது. டிசம்பர் மாதம் இரண்டாம் நாள் உலக கணினி எழுத்தறிவு தினமாகக் கொண்டாடப்படுகிறது. பல்கலைக் கழகங்களில் முதுநிலைப் பட்டத்திலிருந்து உயர்கல்வி தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து ஆராய்ச்சிப்பட்டம் அமைகிறது. தான் படித்ததை ஆராய்ச்சியில் புகுத்தி ஆய்வை (Apply) மேற்கொள்கிறான்..

தேக்க நிலை

உயர் கல்வியான ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி நிலையை அடையவில்லை என்பதே உண்மை. ஏனெனில் இந்தியக் கல்வி முறை குருகுலக் கல்வியை அடிப்படையாகக் கொண்டமைவதே இதற்குக் காரணம். இன்று முனைவர் பட்ட ஆய்வு செய்யும் ஓர் ஆய்வாளன் தன் ஆய்வேட்டை முடிப்பதற்கு குறைந்தது மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் தேவைப்படுகின்றன. முதல் மூன்று ஆண்டுகள் அவன் செய்யும் ஆய்வுப் பொருள் தொடர்பான தரவுகளைச் சேகரிப்பதற்காகப் பிற பல்கலைக்கழக நூலகங்களுக்குச் செல்லுதல், துறைசார் வல்லுநர்களைச் சந்தித்தல் போன்ற பணிகளுக்காகச் செலவிடுகிறான். சேகரித்த தரவுகளின் அடிப்படையில் முதல்படி, இரண்டாம் படி, இறுதிப்படி என்று அவற்றை முறைப்படுத்தித் தட்டச்சு செய்வதற்கு ஓராண்டாகிறது. ஆய்வேட்டை சமர்ப்பித்த நிலையில், ஆய்வேடு மதிப்பீடு செய்யப்பெற்று (உள்நாடு, வெளிநாடு) முனைவர் பட்டத்தைப் பெற ஓர் ஆண்டு என குறைந்தது ஐந்து ஆண்டுகள் செலவிடுகிறான். ஆய்வில் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்க்க இணையம் பெரிதும் உதவுகிறது.

உயர்கல்வியில் இணையம்
உயர்கல்வியின் வளர்ச்சிக்கு இணையம் பல்வேறு வகைகளில் உதவியாக அமைகிறது. தவகல்களைத் திரட்டவும், நேரடிக்கல்வியையும் (Online Study), வேலை வாய்ப்புகளைப் பெறவும் இணையம் பேருதவியாக உள்ளது.
தகவல்களின் தலைமையிடம்
இணையம் விரல் நுனியில் விரியும் விவரக் களஞ்சியமாக செயல்படுகிறது. நமக்குத் தேவையான செய்திகளை இணையத்திலிருந்து எந்த நேரமும், இருந்த இடத்திலிருந்தே பெறமுடியும். ஓர் ஆய்வாளன் தனக்குத் தேவையானதரவுகளை இணையத்தில் உள்ள மின் நூலகத்தைப் (E-Library) பயன்படுத்தி சேகரிக்க முடியும். இன்தாம். காம்., வெப் உலகம், ஆறாம் திணை.காம், தமிழ்.காம், போன்ற முன்னணி இணையதளங்களில் இந்த வசதி உள்ளது. தமிழ் இணையப் பல்கலைக்கழக வலை தளத்தில் மின் நூலகம் பகுதி குறிப்பிடத்தக்கது. கோட்டையூரைச் சேர்ந்த ரோஜா முத்தையா தனது வாழ்நாளில் புத்தகங்களை சேகரிப்பதையே நோக்கமாகக் கொண்டு பல அரிய நூல்களை சேகரித்து வைத்தார். 1980களில் ஓர் ஆய்வாளன் தமிழில் முனைவர் பட்ட ஆய்வு செய்தால் கோட்டையூருக்கு வராமல் தனது ஆய்வை முடிக்க முடியாது என்ற நிலை இருந்தது. அந்த அளவிற்குப் புத்தகங்கள் (ஒரு இலட்சத்திற்கும் மேல்) வாங்கிக் குவித்திருந்தார். பல அரிய நூல்கள் கால வெள்ளத்தில் அழியத் தொடங்கின. ரோஜா முத்தையா நூலகத்தின் மதிப்பை உணர்ந்த சிகாகோ பல்கலைக்கழகம் அவற்றை வாங்கி நுண்படமாக (Microfilm) மாற்றி தங்கள் பல்கலைக்கழக இணைய நூலகத்தில் இணைத்துவிட்டனர். இதனால் அந்நூலகத்தை உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் பயன்படுத்த முடியும். நூல்கள், மின்நூல்களாக (E-Book) மாறும்போது அவற்றின் பயன்பாடு (ஆயுட்காலம்) பல நூற்றாண்டுகளுக்கு மேல் அழியாத ஆவணங்களாக (Archive) அமைந்துவிடுகின்றன. இவ்வாறு நூல்கள் மின்நூல்களாக இணையத்தில் வெளிவருவதால், நாம் விரும்பிய நேரத்தில் அதனைப் படித்து, தேவைப்பட்டால் 'பதிவிறக்கம்' (Download) செய்து பயன்படுத்த முடிகிறது.

ஒரு குறிப்பிட்ட ஆய்வுப் பொருள் தொடர்பான புதிய நூல்கள் இணையத்தில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அவற்றை நமக்கு இணையத்தின் மூலமாகவே இருந்த இடத்திலிருந்தே அவற்றை மின்வணிகம் மூலமாக (E-Commerce) வாங்க முடியும்.

ஆய்வு என்பது ஒரு தொடரோட்டம் (Relay) போன்றது. ஒருவர் தான் செய்த ஆய்வை (அ) ஆய்வு முடிவுகளை இணையத்தில் வெளியிடுவதன் மூலம் பிற ஆய்வுகளுக்கு அடிப்படையாகவும், துணையாகவும் அமைகின்றது. இன்று நமது பல்கலைக் கழகங்களில் நடைபெறும் ஆய்வுகள் பல்கலைக்கழக மைய நூல்களில் யாரும் படிப்பாரின்றி முடங்கிக் கிடக்கின்றன. இதனால் என்ன பயன்? வெளிநாடுகளில் நடைபெறும் ஆய்வுகள், அனைவரும் அறியும் வகையில் இணையத்தில் வெளியிடப்படுகின்றன.

இணையத்தில் உள்ள மின் நூலகத்தைத்தவிர பிற வழிகளிலும் நமக்குத் தேவையான செய்திகளைப் பெற முடியும். நமக்குத் தேவையான பொருள் பற்றிய செய்திகளைத் திரட்ட 'தேடு பொறிகள்' (Search Engine) பயன்படுகின்றன. அதில் குறிப்பிட்ட பொருள் பற்றிய வார்த்தைகளைத் தேடு பொறிகளில் உள்ளிடுவதன் மூலம் அது தொடர்பான இணையப்பக்கங்களின் பட்டியல் வந்துவிடும். அவற்றில் நமக்குத்தேவையான செய்திகள் அடங்கி தளங்களைச் சலித்து (Filter) தேவையான விவரங்களை எடுத்துக் கொள்ள முடியும்.

இணையத்தில் செய்திகள் மட்டுமல்லாது ஆய்விற்குத் தேவையான புகைப்படங்கள் (Photos), வரைபடங்கள் (Graf), நுண்படங்கள் (Microfilm) புள்ளி விபரங்கள் (Datas) ஆகியவற்றையும் பெற முடியும்.

இன்தாம் இணைய தளங்களில் காந்தளகம், நூலகம் போன்ற பதிப்பகங்களில் இதுவரை வெளிவந்துள்ள நூல்களின் பட்டியல்கள் இடம் பெற்றுள்ளன. பதிப்பகங்கள், நூல்கள் அகர வரிசைப்படி இடம் பெற்றுள்ளதால் நமக்கு வேண்டிய நூல்களை வேண்டிப் பெற்றுக் கொள்ளும் வசதி உள்ளது.

இவ்வாறு திரட்டிய தரவுகளின் அடிப்படையில் எழுதப்பெறும் ஆய்வேடுகள் இன்றுவரை பல பல்கலைக் கழகங்களில் A4 வடிவத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றன. இதனால் நாம் கூற வந்த ஆய்வு முடிவுகள் எந்தவிதப் பயனுமின்றி நூலகங்களில் ஆய்வேடாக இடத்தை அடைத்துக் கொள்கின்றன. ஆனால் இதற்கு விதிவிலக்காகத் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை பல்கலைக் கழகத்தில் ஆய்வேடுகளை 'குறுந்தட்டு' (Compact Disc) வடிவிலும் சமர்ப்பிக்கும் முறை நடைமுறையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து தற்பொழுது அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் இம்முறை பின்பற்றப்படுகின்றது. ஆய்வின் நோக்கம், சிக்கல்கள் கருதுகோள், ஆய்வு முடிவுகள் ஆகியவற்றை ஆய்வாளனே நேரடியாக விளக்கும் வகையில் அமைத்து ஆய்வினைச் சமர்ப்பிக்க முடியும். இதனால் தான் சொல்ல வந்த கருத்து ஆழமாகவும், வலிமையாகவும் (Effective) பதிய வாய்ப்புள்ளது. இவ்வாய்வேடுகளைப் பிற நாட்டுத்தேர்வாளர்கள் (புற) (External Examiner) மதிப்பிடுவதும் எளிமையாக அமையும். இதனால் ஆய்வேடுகள் மதிப்பிடுவதில் உள்ள காலதாமதத்தைத் தவிர்க்க முடிகிறது.

நேரடி வாய்மொழித் தேர்வு:
ஆய்வேட்டை முடித்த நிலையில் வேலைவாய்ப்பு, பிற காரணங்களுக்காக வெளிநாடு செல்லும் ஆயவாளர் தான் சமர்ப்பித்த ஆய்வேட்டின் வாய்மொழித் தேர்வை அங்கிருந்தே கலந்து கொண்டு பட்டத்தைப் பெறலாம். இதற்காக இணையத்தில் சிறப்பான வசதி ஒன்று உள்ளது. வீடியோ கான்பரன்சிங் முறையில் உலகின் எந்த மூலையில் இருந்தும் வாய்மொழித் தேர்வை வெற்றிகரமாக முடிக்க இணையம் உதவியாக உள்ளது. குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள் தான் முன்பு பணியாற்றிய அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வு மாணவர்களுக்குத் தற்போது குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்தே வீடியோ கான்பரசிங் முறையில் வகுப்புக்கள் எடுக்க இணையம் வழிவகை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் பல்கலைக்கழகங்கள்:
உள்ள அனைத்துப் பொறியியல் கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப் பட்டுவிட்டன. இதனால் அனைத்துப் பொறியியல் கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்துடன் (www.anna.edu) இணையத்தில் இணைப்பதால் (Networking) தேர்வு முடிவுகள் (Result), நேரடி விண்ணப்பம் (Online Application), பாடப் பிரிவுகளின் விபரம், துறைசார் வல்லுநர்களுடன் கலந்துரையாடல் சந்தேகங்களைத் தெளிவுபெறல் போன்ற வசதிகள் கிடைக்கின்றன. குறிப்பிட்ட பொறியியல் கல்லூரியில் குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் மதிப்பெண்களின் அடிப்படையில் உள்ள காலியிடங்களை நேர்முக கலந்துரையாடல் (Counseling) செல்லும் முன்பே அறிந்து கொள்ள முடியும். உயர்கல்வி மானியக்குழு நாட்டில் உள்ள 240 பல்கலைக் கழகங்களை நெட் ஒர்கிங் மூலம் குழுவின் பொன்விழாவை யயாட்டி இத்திட்டம் ரூ.100 கோடி செலவில் நிறைவேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச அளவில் வெளிவரும் ஆய்வு இதழ்கள் (International Research Journals) உள்ளிட்ட மின்னனுத்தகவல் தொகுப்பு விபரங்கள் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது. இத்திட்டத்தின் முதல் கட்டமாக 70 பல்கலைக்கழகங்கள் இணையத்தில் இணைக்கப்படுகின்றன. இதில் சென்னைப் பல்கலைக்கழகமும் ஒன்று (ஆதாரம்: தினமணி செய்தி நாள்: 28.11.2002) இத்திட்டம் முழுமையாக நிறைவேறினால் உயர்கல்வி வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க மாற்றத்தையடைய முடியும்.

இந்தியாவில் பல முன்னணிப் பல்கலைக்கழகங்கள் தங்களுக்கென்று இணைய தளங்களை ஏற்படுத்திக் கொண்டு நேரடிப் பயிற்சிகள், (Online Training) படிப்புகள், நேரடி விண்ணப்ப முறை (Online Application), நேரடி ஆலோசனைகள் (Online Advice), தேர்வு முடிவுகள் (Result) முதலிய சேவைகளை வழங்கி வருகின்றன. சான்று www.ksu.edu, www.annauniv.edu, www.nus.edu . பல்கலைக் கழகங்களில் உள்ள ஆசிரியர்கள் (Faculty), ஆய்வு மாணவர்கள், ஆய்வுத் தலைப்பு முதலிய விபரங்களை வெளியிடுவதால் பல மாணவர்கள் ஒரு பொருள் பற்றி ஆய்வு செய்வதால் ஏற்படும் கால விரயத்தைத் தவிர்க்க முடியும்.

பிறசேவைகள்:
பல இணைய தளங்கள், ஆய்வுக் கருத்தரங்கம் (Seminars), மாநாடுகள், பட்டறை வகுப்புகள் (Workshop), பயிற்சி வகுப்புகள் (Online Training), நேரடி வகுப்புகள் (Onlie Study), உயர்கல்விக்குரிய ஊக்கத்தொகை (Fellowships), வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு, உயர்கல்வி போன்ற பல்வேறு விபரங்களைத் தருகின்றன. இதனால் அவற்றை ஆய்வாளர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள இணையம் பயன்படுகிறது. வளர்ந்து வரும் அறிவியல் உலகத்திற்கு ஏற்ப ஆய்விலும் இணையம் போன்ற நவீன ஊடகத்தைப் பயன்டுத்துவதன் மூலம் விரைவான வளர்ச்சியை உயர்கல்வியில் அடைய முடியும் என்பதில் ஐயமில்லை.