உள்வழிப்படுதல்
தொல்காப்பியம் தமிழரின் முதல் அடையாளமாகத் திகழ்கிறது. தமிழ் மொழிக்காப்பு முயற்சி மட்டுமின்றித் தமிழின் வரலாற்றுக் களஞ்சியமாகவும், சமுதாய வாழ்வு பற்றிய சான்றுகளைப் பொதித்து வைத்த ஆவணமாகவும் அமைந்துள்ளது. அவற்றுள் இலக்கியம் படைக்கும் நெறிமுறை கூறும்பகுதி பொருளதிகாரம். தொல்காப்பியப் பொருளதிகாரம் இலக்கணமாக மட்டுமின்றி இலக்கியமாகவும் திகழும் மாண்புடையது. தொல்காப்பியர் படைத்துள்ள அகத்திணை மாந்தர்களுள் தலைவிக்கு முக்கிய இடமுண்டு. தலைவிக்கு உரிய மாண்புகளில் குறிப்பிடத்தக்கது. ‘கிழவோற்சேர்தல் கிழத்திக்கில்லை’ என்பதாகும். இக்கருத்தைச் சங்க இலக்கியப் பாடல்களுடன் ஒப்பிட்டு நோக்கும் தன்மையுடன் இக்கட்டுரை அமைகிறது.
தொல்காப்பியத் தலைவி
தொல்காப்பியர் தலைவிக்குரிய பண்புகளை அகத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல் ஆகிய இயல்களில் விளக்குகிறார். ‘தலைவி, தலைவனுடன் கடல் கடந்து செல்லும் வழக்கம் இல்லை’ (தொல். அகத். 34) என்றும், ‘மடலேறுதல் மகளிர்க்கு இல்லை (தொல். அகத். 35) என்றும் குறிப்பிடுகிறார். தலைவிக்குரிய மிக முக்கியமான பண்புகளாக,
'அச்சமும், நாணும் மடனும் முந்துறுதல்
நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப'
(தொல்.கள.8)
'செறிவும் நிறையும் செம்மையும் செப்பும்
அருளும் அருமையும் பெண்பாலான'
 (தொல்.பொரு.15)

என்பனவற்றை வலியுறுத்துகிறார். தலைவி தன் கற்பைக் காக்க உறுதிபூண்டு பேசுமிடங்களைக் களவியலில்,

'உயிரினும் சிறந்தன்று நாணே; நாணினும்
செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று எனத்
தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சமொடு
காமக்கிழவோன் உள்வழிப் படினும்
தாவில் நன்மொழி கிழவி கிளப்பினும்
ஆவகை பிறவும் தோன்றுமன் பொருளே'
(தொல்.கள.22)

என்று குறிப்பிடுகிறார். ‘காமக்கிழவோன் உள்வழிப்படுதல்’ தலைவிக்கு உரிய செயலாகக் குறிப்பிடும் இடம் உற்று நோக்கத்தக்கது.

உள்வழிப்படுதல் விளக்கம்

உள்வழிப்படல் என்ற சொல்லை உள் + வழி + படுதல் எனப் பிரிக்கலாம். ‘உள்’ என்ற சொல் இடம், உட்பொருள், உள்ளென்னேவல், மனம் என்ற பொருள்களைத் தருகிறது. உள்கல், உள்குதல் உள்ளல் என்ற சொற்கள் ‘நினைத்தல்’ என்ற ஒரு பொருளையே குறிக்கின்றன. ‘உள்வழிக் கடந்தோன்’ என்ற சொல் கடவுளைக் குறிக்கும். உள்ளத்தின் வழியே கடந்து சென்றால் இறைவனை அடைய முடியும் என்பது பொருள். ‘உள்வழிப்படல்’ என்ற சொற்றொடர் ‘உள்ளத்தின் வழியே செல்லுதல்’ என்ற பொருளைக் குறிப்பதை அறிய முடிகிறது. எக்காலத்தும் ஒரு பெண்ணுக்கு உயிரைவிட நாணம் சிறந்தது. நாணத்தைவிடக் குற்றமற்ற, அறிவார்ந்த கற்பு சிறந்தது. இதனை உட்கொண்ட மனத்துடன் தன் காமத்திற்கு உரியவனாகிய தன் தலைவன் இருக்குமிடம் தேடிச்செல்ல நினைத்துப் பேசினும், குற்றமற்ற பிற நன்மொழிகளாய் அதனோடு தொடர்புடையன வற்றைத் தலைவி சொன்னாலும் அவ்வகைப்பட்டன பிறவும் பாடுபொருளாக அக இலக்கியத்தில் இடம் பெறும் என்பது மேற்கூறிய நூற்பாவின் அடிக்கருத்தாகும்.

உரையாசிரியர் கருத்து

இளம்பூரணர், ‘உயிரினும் நாண் சிறந்தது: அதனினும் குற்றந்தீர்ந்த காட்சியினையுடைய கற்பு சிறந்தது’ என முன்னோர் கூற்றையுட்கொண்டு தலைவன் உள்ளவிடத்துச் செல்லலும், வருத்தமில்லாச் சொல்லைத் தலைவி சொல்லுதலுமாகிய அவ்வகைப் பிறவும் தோன்றும் அவை பொருளாம் என்று உரை செய்கிறார். எனவே ‘இவ்வாறு செய்தல் பொருளல்ல என்று கூறற்க என்றவாறு’ என விளக்கமும் தருகிறார்.

பண்டைக்காலத்தில் பொதுவாகத் தலைவனை தலைவி தேடிச் செல்வது இழுக்கான செயல் என்று கருதப்பட்டது. தொல்காப்பியத்தை அடியயாற்றியே சங்கப் பாக்களும் அமைகின்றன. இளம்பூரணர் கருத்துப்படி தலைவி இருக்குமிடத்தைச் சென்று அடையலாம் என்றால் அவர் எடுத்துக்காட்டும் பாடலில் அத்தகைய குறிப்பு இல்லை. ‘தலைமகள் தன் நெஞ்சிற்குச் சொல்லுவாளாய்த் தோழி கேட்பச் சொல்லியது’ என்ற துறைபட அமைந்த குறுந்தொகைப் பாடலில் (11) தலைவி, தலைவன் இருக்குமிடத்தை அடைவோம் எனத் தன் நெஞ்சிற்குக் கூறிய பாடலையே எடுத்துக்காட்டுகிறார். இந்தப் பாடலில் தலைவி, தலைவன் இருக்கும் இடத்தைச் சென்று சேர்ந்ததாகக் குறிப்பு இல்லை. இதனை,

'எழுவினி வாழியயன் நெஞ்சே .....
-----------------------
மொழிபெயர் தேத்தா ராயினும்'
வழிவிடல் சூழ்ந்திசின் அவருடை நாட்டே'
(குறுந்.11 : 4 - 8)

என்ற பாடலடிகள் மெய்ப்பிக்கும். எனவே தொல்காப்பியர் குறிப்பிடும் உள்வழிப்படுதல் என்ற சொல்லாட்சி தலைவன் இருக்கும் இடத்தைத் தலைவி தானே அடைதல் என்ற பொருளை ஒருபோதும் வலியுறுத்தவில்லை. தொல்காப்பியர் பொருளியலில்,

'உடம்பும் உயிரும் வாடிக் கண்ணும்
என்னுற் றனகொல் இவையயனின் அல்லதைக்
கிழவோற் சேர்த்தல் கிழத்திக்கு இல்லை'
(தொல். பொரு. 91 )

என்று குறிப்பிடுகின்றார்.

நச்சினார்க்கினியர் கருத்து

நச்சினார்க்கினியரும் இளம்பூரணர் கருத்திற்கு உடன்படுகிறார். சிறுபான்மை வேறுபட்டு வருவனவற்றைக் கற்பு சிறப்ப நாண் துறந்தாலும் குற்றம் இன்றென்றற்குச் செயிர்தீர் என்றார்; நன்மொழி என்றார் கற்பின் திரியாமையின் அவை இன்னோரன்னவழி நெஞ்சோடு கிளத்தல் போல்வன என விளக்கம் தருகிறார். இதற்கு யாண்டும் காணேன் மாண்தக் கோனை (குறுந்.31) என்ற ஆதிமந்தியாரின் பாடலை எடுத்துக் காட்டுகிறார்.

ஆதிமந்தி யார்?

கரிகாற் சோழனின் மகளான ஆதிமந்தியார் என்னும் சங்கப் பெண்பாற்புலவர், தன் கணவனான ஆட்டனத்தியைத் தேடித் திரிந்ததாகப் பாடிய பாடல் குறுந்தொகையில் இடம் பெற்றுள்ளது. ஆதிமந்தியின் கணவன் கிழார் நகரினை அடுத்த காவிரியில் புதுவெள்ளப்புனல் விழாவில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், தன் கணவனைத் தேடி ஊர் ஊராகச் சென்று அலைந்து புலம்பிய அவல நிலையை, பரணர் தம் அகப்பாடல்களில் (அகம்.76, 135, 222, 236) குறிப்பிடுகிறார் ஒளவையாரும்,

'நெறிப்படு கவலை நிரம்பா நீளிடை
வெள்ளி வீதியைப் போல நன்றும்
செலவயர்ந் திசினால் யானே.....
(அகநா. 147; 8 - 10)

என்று வெள்ளிவீதியார் தன் கணவனைத் தேடி அலைந்து திரிந்த செய்தியைக் குறிப்பிடுகிறார். பரணரும், ஒளவையாரும் முறையே ஆதிமந்தி, வெள்ளிவீதியார் ஆகியோர் தம் காதலர்களைத் தேடி அலைந்த செய்தியை உவமையாகவே கையாண்டுள்ளனர் என்பது இவண் நோக்கத்தக்கது.

தொல்காப்பியர், தலைவனிருக்கும் இடத்தைத் தேடிச்செல்லும் வழக்கு இல்லை எனத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ள போதும், சங்க இலக்கியத்தில் ஆதிமந்தியார் பாடல் (குறுந்.31) மட்டும், தன் தலைவனை ஊர் ஊராகத் தேடி அலைந்து புலம்பிய அவல நிலையைப் பாடியுள்ளது. ‘பெண் எழுத்தைத் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியதற்கான தேவை இன்று வரை நீடித்து வருகிறதென்றே கூறவேண்டும். படைப்பிலக்கியம் புனைவதற்காக எழுதுகோளைப் பெண் ஏந்தத் தொடங்கிய காலக்கட்டத்திலேயே ஆணாதிக்கக் கருத்தியல்கள் சமூகத்தில் நிலைப்பட்டுப்போய் வேர்பிடித்துத் தழைத்துவிட்டன என்பதும் அவற்றின் தாக்கங்கள் குடும்பத்தளத்தில் மட்டுமின்றிக் கலை, இலக்கியம், சமயம், அரசியல் எனச் சமுதாயத்தின் பல தளங்களிலும் தமது சுவடுகளை அழுத்தமாகப் பதியத் தொடங்கிவிட்டன’ (எம்.ஏ.சுசீலா, பெண் இலக்கியம் வாசிப்பு, பக்.68, 69) என்று கூறுகின்ற கருத்தாக்கம் ஈண்டு மனங்கொள்ளத்தக்கது. சங்க அகப்பாடல்களில், அவற்றின் திணை துறை கட்டமைப்பிற்கேற்பக் காதல் வயப்பட்ட பெண்ணின் மன ஆற்றாமைகளையும், உடல் சார்ந்த பசலைத் துன்பங்களையும் ஆண்பாற் புலவர்கள் போலவே பெண் கவிஞர்கள் காட்டியுள்ள போதிலும் ஒரு சில பாடல்கள், பெண்ணுக்குரிய மரபு வழி மதிப்பீடுகளை விமர்சனம் செய்து அவற்றைத் தாண்டும் எல்லையைப் பெண் துணிவதைச் சித்தரிப்பதாகவே உள்ளன. அவற்றுள் ‘யாண்டும் காணேன் மாண்தக் கோனை’ என்ற ஆதிமந்தியாரின் பாடலும் குறிப்பிடத்தக்கது. தொல்காப்பியர் பிரிவால் உடம்பும் உயிரும் வாடிய போதும், இவை ஏன் இப்படியாயின என வருந்துவதல்லது, தலைவன் இருக்குமிடம் தேடிச்செல்வது தலைவிக்கு இல்லை என மீண்டும் வலியுறுத்துகிறார். தனித்து நெஞ்சோடு உசாவுங்காலத்து, தலைவனிருக்குமிடம் போவோமா? எனக் கூறுவதுண்டு. ஆனால் அவ்வாறு தலைவனை நாடிச் செல்லுதல் இல்லை (தொல்.பொரு.10) என்றும் குறிப்பிடுகிறார். இவ்வாறு தலைவன் இருக்குமிடம் செல்வோமா? என்ற கூற்று மடற்கூற்றை ஒத்தது. தலைவன் ‘மடலேறுவேன்’ என்று கூறுவது அன்பின் ஐந்திணை. அதுபோலவே தலைவி, தலைவன் உள்வழிப்படுவதாகக் கூற்று நிகழ்த்துவாளே தவிர, அவ்வாறு ‘உள்வழிச் செல்லுதல்’ இல்லை. வெள்ளூர் கிழார் மகனார் வெண்பூதியாரின் குறுந்தொகைத்தலைவி, தலைவனின் பிரிவால் வாடியவழி உழன்று,
'யாங்கண் செல்கம் எழுகென ஈங்கே
வல்லா கூறி இருக்கும் ------------'
(குறுந். 219; 4 - 5)

என்று பாடுகிறாள். தலைவனே தலைவியை நாடிச்செல்லும் இயல்பு வழக்கத்தில் உண்டு. இந்தத் தமிழ்ப்பண்பாடே இன்றும் திருக்கோயில் வழிபாட்டு நெறிமுறைகளின் ஒன்றாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. திருக்கோயில்களில் வழிபாட்டு நெறிமுறைகளில் இறுதி நிகழ்ச்சியாக, ஒவ்வொரு நாளின் முடிவிலும், இறைவன், இறைவி இருக்கும் இடத்திற்குச் சென்று பள்ளியறையில் துயிலும் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. எனவே, தலைவன் தலைவியை நாடிச் செல்லலாமே தவிர, தலைவி தலைவனைத் தேடி செல்லும் மரபு இல்லை என்பது வெளிப்படை.

பண்டைக் காலத்தில் தலைவி பெரும்பாலும் இல்லம் சார்ந்த இடங்களிலேயே உலவி நின்றாள் எனத் தெரிகிறது. ‘மனைவி’, ‘இல்லாள்’, ‘மனையுறை மகளிர்’ போன்ற சொற்றொடர்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன. தலைவி குறிகள் நிகழும் இடத்தைக்கூடத் தானே குறிக்கிறாள். இதனைத் தொல்காப்பியர்,

'இரவுக் குறியே இல்லகத்துள்ளும்
மனையோர் கிழவிகேட்கும் வழி அதுவே
மனையகம் புகா அக் காலையான'
(தொல். கள. 40)
'பகற்புணர் களனே புறம்என மொழிப
அவள் அறிவுணர வருவழியான'
(தொல். கள. 41)

என்று புலப்படுத்துகிறார். எனவே, தலைவி தன் இல்லத்தின் புறத்தே, இல்லில் உள்ளோர் பேசுவது கேட்கும் தூரத்தில் மட்டுமே செல்லும் இயல்பினை உடையவளாக இருந்திருக்கிறாள். இறையனர் அகப்பொருள் உரையும்,

'இரவு மனை இகந்த குறியிடத்தல்லது
கிழவோற் சேர்தல் கிழத்திக்கில்லை'
(இறை. அகப்பொருள். 21)

என்ற நூற்பாவில், தலைவி, தலைவனைச் சேரும் எல்லையை வரையறை செய்கிறது. அகநானூற்றுத் தலைவியை, 'தன் இல்லகத்தே விட்டுச் செல்லாதே; நீ பேதைப் பருவத்தினள் அல்லள் பெதும்பைப் பருவத்தினை அடைந்துவிட்டாய்!’ எனக் கடிந்து கொள்ளும் தாயைக் (அகம்.7; 5-7) கயமனார் காட்டுகிறார்.

ஆதிமந்தியார் தன் கணவனைக் காவிரியாற்றில் தொலைத்த நிலையில் அவனைத் தேடிச் செல்கிறாள். ‘தன் கணவன் என்ன ஆனான்’ என்று தெரியாமல் அவனைத் தேடிச் செல்கிறாள். ஆதிமந்தியார் சென்ற செலவின் நோக்கம் வேறுபட்டது. தலைவி, ‘தலைவனைப் புணர்ச்சியின் நோக்கமாகத் தான் தேடிச் செல்லுதல் கூடாது’ என்று தொல்காப்பியர் வலியுறுத்துகிறார். ஆதிமந்தியார் புணர்ச்சி நோக்கமின்றித் தன் முதலையே தொலைத்த நிலையில் தேடிச் செல்லுதல், தமிழ்ப்பண்பாட்டு மரபைச் சிதைப்பதாகப் பொருள் கொள்ளக்கூடாது. தலைவி தன் முதல்வனையே (கணவனையே) தொலைத்த நிலையில் தலைவன் உள்ளவிடத்துத் தேடிச் செல்லலாம் என்ற புதிய விதி தொல்காப்பியத்துள் மறைந்து நிற்பதை ஆதிமந்தியாரின் பாடல் வழி அறியமுடிகிறது.