பாவாணர் தமிழ்நெறி

பாவாணர் தமிழ் உணர்வும் தமிழ்ப்புலமையும் மிக்கவராய் வாழ்ந்தவர். ‘சிந்தனை முகத்தில் தேக்கி’ என்று கம்பன் கூறியதுபோல இவர் முகத்தில் எக்காலத்திலும் தமிழ்ச் சொல்லாராய்ச்சி குறித்த கருத்தோட்டங்கள் காணப்படும். எக்காலத்தும் எதை எழுதினாலும் அவர் மனத்தில் தமிழ்ச்சிந்தனை தேங்கிக் கிடக்கும். அவருடைய தமிழ்ச்சொல் ஆராய்ச்சிப்புலமைக்கு ஒப்பாரும் மிக்காரும் எவருமிலர். அவருடைய அனைத்து நூல்களிலும், தமிழ்ச் சொற்களை ஆராய்கின்ற பகுதி இடம் பெற்றிருப்பதைக் காணமுடிகிறது.

சுட்டெழுத்தும், சொற்பிறப்பும்:

தமிழ்ச்சொற்கள் எவ்வாறு உருவாயின என்பதைப் பாவாணர் ஆராய்ந்து சொல்லாராய்ச்சி பற்றிய அரிய நூல்களைத் தமிழ் உலகிற்கு வழங்கியுள்ளார். தமிழ்ச் சொற்களைத் தமிழருடைய உலகியல் வழக்கையும், இலக்கியத்தையும் ஒப்பு நோக்கி ஆராய்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு சொல்லும் ஏதோ ஒரு சுட்டின் அடிப்படையில் வந்தது என்று கருதுகிறார். ஒரு சுட்டின் அடிப்படையில் பல்வேறு சொற்கள் பிறக்கும் என்பது இவர் துணிபு. எல்லாச் சுட்டெழுத்துகளும் பல சொற்கள் பிறப்பதற்குக் காரணமானவை என்பது இவருடைய கருத்து.

பல தமிழ்ச் சொற்களைத் தமிழறிஞர்கள் கூட வடசொல் என்று கருதுகின்றனர். ஆனால் பாவாணருக்குத் தமிழ்ச் சொற்களை வடசொல் என்று சொல்லுவது ஆழ்ந்த வருத்தம் தரும் செயலாகும். அச்சொற்களின் தமிழ்மையை வெளிப்படுத்தப் பாவாணர் முயன்று, ‘வடமொழி வரலாறு’ என்ற நூலை எழுதினார். இந்த நூலை எழுத வேண்டும் என்ற சிந்தனை 1947-இல் (முதல் தாய்மொழி முன்னுரை) இவருக்கு ஏற்பட்டுவிட்டது. ஆனால் இந்நூல் வெளிவந்ததோ 1967 ஆம் ஆண்டில் தான். தமிழ்ச் சொற்கள் எல்லாம் வடசொற்கள் என்று மயங்கும் நிலையை இவர் தன்னுடைய நூலில் விளக்கியிருக்கிறார். அந்நூலின் நான்காம் பகுதியாகிய ‘தமிழ் மறைப்பதிகாரத்தில்’ தமிழ்ச்சொற்களை இலக்கணிகள் வடசொற்களாக எவ்வாறு மாற்றினர் என்பதை மொழி ஞாயிறு சுட்டி விளக்குகிறார். அவ்வாறு விளக்குகிற ஒரு சொல் குமரன் என்பது. இதனை,

கும்.கும்மல்.கும்மல் கூடுதல்
கும்மலி.பருத்தவன்
கும்.கொம்.கொம்மை
1. பருமை (பெருங்.உஞ்.40;210)
2. திரட்சி (சூடா)
3. இளமை (திவா)
கும்.குமர்.1 திரண்ட இளஞை. கன்னி
2. கன்னிமை, குமரிக்குஞ் சசி போல்வாள் (குற்றால தல, தருமசாமி. 470)
3. அழியாமை ‘குமருறப்பிணித்த’ (பாரத இந்திரப். 32)
மணப் பருவத்தில் ஆணும், பெண்ணும் திரள்வது இயல்பு.
ஓ.நோ: விடை.விடலை.இளைஞன் விடலி.இளஞை
விடை.இள ஆண் விலங்கு, பறவையின் திரண்ட இளமை
விடைத்தல் = பருத்தல்
குமர்.குமரன்=இளைஞன், முருகன்
குமர்.குமரி=இளைஞை, கன்னியாகக் கருதப்பெறும் காளி

என்று பொருளை ஆராய்ந்து விளக்குகின்றார். இவ்வாறு ஒரு சொல்லுக்கு அடிப்படையான மூன்று பொருளை விளக்குகிறார். ஆனால் மொழியியல் அறிஞர்கள் சிலர் தமிழ்ச் சொற்களுக்குப் பொருள் தமிழ்ச் சொற்களைக் கொண்டே விளக்கக்கூடாது என்று நினைக்கின்றனர்.

பாவாணர் ஒரு மொழியில் உள்ள சொல் அம்மொழியின் சூழலுக்கும் பண்பாட்டிற்கும் ஏற்பவே உருவாகியிருக்க வேண்டும் என்று கருதுகிறார். ஒரு மொழியில் வழங்கும் சொல் அந்த மொழியினரால்தான் உருவாக்கப்பட்டிருக்கும் என்பது தான் உண்மை. வேற்றுமொழியிலிருந்த அடிப்படைச் சொற்களை, கருத்துகளைப் பிறமொழியிலிருந்து கடன் வாங்கியிருக்க முடியாது. மனிதர்களிடையே வழங்குகிற உறவுப் சொற்கள் மக்கள் தோன்றிய பின்னால் உருவாகியது. அவற்றை எந்த மொழியினரும் பிறமொழியாளரிடமிருந்து கடன் வாங்கியிருக்க முடியாது. இத்தகைய சொற்கள் அடிப்படைச் சொற்கள் (யழிவிஷ்உ Vலிஉழிணுற்யிழிrதீ) எனப்படும். இத்தகைய சொற்களை ஆராய்ந்து பாவாணர் பிறர் வடமொழிச் சொற்கள் என்பவற்றைத் தமிழ்ச் சொற்கள் என்று நிறுவியுள்ளார். அவை எப்படித் தமிழ் அடிப்படையில் பிறந்தன என்றும் ஆராய்ந்திருக்கிறார். இதனை அவர் முதல் தாய்மொழி, சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் ஆகிய நூல்களில் விளக்கியிருக்கிறார்.

மொழியாய்வின் குறை:

இந்திய மொழியியல் அறிஞர்களும், தமிழ்மொழி அறிஞர்களும் சொல்லாராய்ச்சியில் ஒப்பியல் நெறியையே பின்பற்ற வேண்டும் என்றும், இந்த ஆய்வில் ஒரு மொழிக் குடும்பத்தில் பொதுக்கூறுகள் புலனாகும் என்றும் குறிப்பிடுவர். இதற்கு அடிப்படை வருணனை மொழியியல் என்றும் கூறுவர்.

பாவாணர் சொல்லாராய்ச்சியைத் தமிழ் மொழியியலார் நேரடியாக எதிர்க்க முடியவில்லை. ஏனெனில் மறைவாகத் தங்கள் கருத்துக்களையும், எதிர்ப்புகளையும் வீசுகின்றனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பாவாணர் வருணனை மொழியியலின் குற்றங்களையும் தமிழ் லெக்சிகனில் உள்ள குறைபாடுகளையும் சுட்டிக் கட்டுரைகளும், நூற்களும் எழுதினார். இதன் காரணமாகத் தமிழ்க் கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் பாவாணரைப் புறக்கணித்தன. எனினும் ஆங்காங்கே தனித்தமிழ் ஆர்வலர்கள் தேவநேயப் பாவாணர் கருத்துகளை ஏற்று அவரைப் போற்றினர். அவருக்குத் தமிழுலக ஆதரவு இருந்தது என்பதை மறுக்கவும் முடியாது.

பாவாணர் நெறியும் வழியும்:

பாவாணர் தனக்கு முன்னே தமிழ்ச் சொற்களை ஆராய்ந்திருந்த மாகறல் கார்த்திகேய முதலியார், யாழ்ப்பாணம் ஞானப்பிரகாசர் ஆகியோரது மொழிநூல் மரபைப் பின்பற்றினார். இதன்மூலம் பாவாணரின் சொல்லாராய்ச்சி நெறி ஒவ்வொரு தமிழ்ச்சொல்லும் எந்த ஒன்றின் அடிப்படையாகப் பிறந்தது என்பதைக் கண்டு வெளிப்படுத்திய ஆய்வாக அமைந்தது. இவருடைய அறிவுத்திறம், சொல்லாராய்ச்சி மரபு தமிழ்ச் சொற்பிறப்பியல் அகராதி தோன்றுவதற்கு வித்தாயிற்று. அதனை முழுமையாக முடிக்காமல் அவர் நமனுலகம் சென்றது தமிழுக்கு இழப்பே! அன்றுத் தமிழரும், தமிழக அரசும் இந்த அறிஞருக்கு உரிய காலத்தில் உரிய வாய்ப்பைத் தாராமை வருந்தற்பாலது.

தமிழ் உலகத்தில் பாவாணரின் பெருமையையும், அருமையையும் உணராதவர்களே பலர். அன்றைய ஆட்சியாளராக விளங்கியவர்கள் பிறமொழிச் சார்பிலேயே தமிழும், தமிழ்நாடும் வளர்ந்தது என்றும், வாழ்ந்தது என்றும் கருதினர். இதன் காரணமாகவே பாவாணர் அரசு சட்ட விதிகளுக்கும், பல்கலைக்கழக நடைமுறைச் சட்டங்களுக்கும் தாக்குப் பிடிக்க முடியாதவராயினார். அவர் அறிவு, உணர்வு அனைத்தும் தமிழின் முதன்மையையும், மேன்மையையும் வெளிப்படுத்துவதாக இருந்தது.

தமிழ்ச் சொற்கள் ஒன்றின் அடிப்படையிலிருந்து ஒன்றாகக் காலந்தோறும் பொருள் பெருக்கம் பெற்றதைப் பாவாணர் பல்வேறு இலக்கியத்தைக் கொண்டும் மக்கள் வழக்கைக் கொண்டும் நிறுவினார். அவர் சொல்லை ஆராய்ந்து பொருளை வெளிப்படுத்திக் காட்டுவது சிறப்புடைய பகுதியாகும். இவருடையமுறைகளைப் பின்பற்றிப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும் பல தமிழ்ச் சொற்களைத் தமிழ் மரபின் அடிப்படையில் பிறந்தது என்று ஆராய்ந்து எழுதலானார். தமிழ் மக்களிடையே சொல்லாராய்ச்சித் துறையை வளப்படுத்தியவர், பரப்பியவர் பாவாணரே. தமிழக அரசு மொழி ஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் அவர்களைத் தொன்றுதொட்டு ஆதரித்து வருகிறது. திராவிட இயக்கம் பாவாணரை ஆதரித்து வந்தது. அவர் வாழ்ந்த காலத்தில் அவருக்குக் கிட்டிய பொருட்பயன் குறைவு என்றாலும், அவர் தமிழ் உலகில் விதைத்து விட்டுப்போன ஆய்வு விதைகள் என்றும் மறையாதவையாய் வாழும்; பெருகும். அவருடைய நூல்களை மக்கள் உடைமையாக்கித் தமிழக அரசு பாவாணர் கருத்துக்களை உலகெங்கும் வாழ வைக்கச் செய்தது நல்லவழியாகும்.