கேரளாவில் கொண்டாடப் பெறும் திருவோணம் பண்டிகை மகாபலி சக்கரவர்தியின் நினைவாகக் கொண்டாடப்பட்டு
வருகிறது.
புராண காலத்தில் மகாபலி என்னும்
மன்னன் கேரள நாட்டைச் சிறப்பாக ஆண்டுவந்தான். அவன் பெற்ற தவவலிமையால் மூவுலகையும் ஆளும்
மன்னனாகத் திகழ்ந்தான். இதனைப் பொறுக்காத தேவர்கள் அசுர வலிமை கொண்ட மகாபலியை அடக்கித்
தங்களின் வலிமைக்குக் கொண்டுவரத் திருமாலின் உதவியை நாடிச் சென்றனர். திருமாலும் வாமன
அவதாரம் எடுத்து மகாபலியிடம் மூன்றடி மண்ணைத் தானமாகக் கேட்டார். திருமாலின் சூட்சமத்தை
அறிந்த அசுர குருவான சுக்ராச்சாயான் அறிவுரையைக் கேளாத மகாபலியும் மூன்றடி மண் கொடுக்க
சம்மதித்தார். திருமால் விசுவரூபம் எடுத்து வானத்தை ஒரு அடியாகவும், பூமியை மற்றொரு
அடியாகவும் வைத்து அளந்து மூன்றாவது அடியை மகாபலியின் தலைமீது வைத்தார். வாமன மூர்த்தியால்
மகாபலிச் சக்கரவர்த்தி பாதாளத்துள் வீழ்த்தப்பட்டபோது, தான் ஆட்சி செலுத்திய நாட்டை
ஆண்டுக்கொரு முறை வந்து கண்ணுற்று மகிழத் திருமாலிடம் வரம் வேண்டினார். பிறகு திருமாலும்
மகாபலியை ஆட்கொண்டு வரம் நல்கினார். இவ்வாறு மகாபலிச் சக்கரவர்தியின் நினைவு நாளாகவும்,
மகாபலி மன்னன் இந்த திருவோண நன்னாளில் தான் ஆண்ட நாட்டிற்கு வருவதாகவும், அவனை வரவேற்கும்
முகமாகவும் இவ்வோணம் பண்டிகை கொண்டாடப் பெறுவதாகக் கூறப்படுகிறது.
கேரளாவில் உள்ள ஒவ்வொரு வீட்டின் வாயிற் படியிலும் மகாபலி மன்னனை வரவேற்கும் முகமாக
பல வண்ண மலர்களால் ஆன கோலங்களைப் பெண்கள் வரைகின்றனர். கோலத்தின் நடுவில் குத்துவிளக்கேற்றி
வைத்து, அதனைச் சுற்றிப் பல வகையான காய், கனிகளையும் அழகுற அடுக்கி வைக்கின்றனர். இக்கோலத்தை
"அத்தப்பூக் கோலம்" என்று அழைக்கின்றனர். அன்று மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து பலவிதமான
காய், கனிகளையும் உணவு வகைகளையும் விருந்தினர்களுக்கு வழங்கித் தங்களின் மகிழ்ச்சியை
வெளிப்படுத்துகின்றனர். திருமால் உறையும் திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
திருவிழாவின் ஒரு பகுதியாகப் பல வகை விளையாட்டுகள் நடைபெறுகின்றன "வேலக்களி" என்னும்
வீர விளையாட்டு (சேரிப்போர்), ஓணப்பந்து, படகுப் போட்டி முதலிய விளையாட்டுகள் நடைபெறுகின்றன.
ஆவணிப் பௌர்ணமியில் நிகழும் இவ்வோண நன்னாள் திருமாலுக்குச் சிறப்புடையதுபோல், மார்கழிப்
பௌர்ணமியில் நிகழும் திருவாதிரை நாள் சிவனுக்குச் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது.
எனவே தான் இவ்விரண்டு பெருவிழாக்களும் சங்க நூல்களிலும், தமிழ்நாட்டிலும் சிறப்பாகக்
குறிக்கப்பட்டுள்ளன. ஓணம், ஆதிரை என்ற பெயருடன் 'திரு' என்று அடை சேர்த்து வழங்கப்படுகிறது.
கேரளாவில் கொண்டாடப்பெறும் திருவோணத் திருவிழா வைணவ சமயச் சார்போடு தொடர்புடையது என்ற
போதிலும், ஏழை, பணக்காரர் என்ற பேதமின்றி கிறித்துவர்கள், இசுலாமியர்கள் என அனைவரும்
ஒன்று கூடித் தேசிய விழாவாகக் கொண்டாடி வருகின்றனர். மதுரைக்காஞ்சி சுட்டும் ஓணம் பண்டிகை
முதலில் சைவ சமயத்தவரே கொண்டாடி மகிழ்ந்தனர். பின்னாட்களில் வைணவ, சைன, பௌத்த, சயத்தைச்
சார்ந்தவர்களும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதுபோன்ற பிற பண்டிகைகளும் அனைத்துத் தரப்பு மக்களும் கொண்டாடும் வகையில் அமைய வேண்டும்.
இதனால் வேறுபட்டுக் கிடக்கும் மனிதர்கள் ஒன்றுபட்டுக் கிடக்கும் ஆலமரமாகத் தழைக்க வேண்டும்.
|