நடமாடும் நூலகம்

புத்தகங்களை நேசித்து அவற்றைச் சேமித்து எதிர்காலச் சந்ததியினருக்கு அவற்றை விட்டுச் செல்ல வேண்டும் என்று எண்ணிச் செயல்பட்ட மாமனிதர் திரு.முத்தையா செட்டியார் அவர்கள். ‘நடமாடும் நூலகம்’ என்று அழைக்கப்படும் ரோஜா முத்தையா தெற்காசியச் சமூகக் கலாச்சார வரலாற்றுப் பெட்டகத்தின் திறவுகோலை உலகிற்கு வழங்கிய மாமனிதர் ஆவார்.திரைகடல் ஓடித் திரவியம் தேடுவதையே வாழ்க்கைத் தொழிலாகக் கொண்ட நகரத்தார் வழியில், இராமநாதன் செட்டியார், அழகம்மை ஆச்சி ஆகியோருக்கு 1926-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் நாள் முத்தையா பிறந்தார். இளம் வயதிலேயே ஓவியம் தீட்டும் திறமை படைத்த முத்தையா சென்னை சென்று ‘ரோஜா ஆர்ட்ஸ்’ என்ற பெயரில் விளம்பரப் பலகை எழுதும் நிறுவனம் ஒன்றை நடத்தினார்.

ஓவியங்கள் வரைவதற்காக முதலில் புத்தகங்களை வாங்கிய முத்தையா பிறகு புத்தகம் படிப்பதில் ஆர்வம் கொண்டு அவற்றைச் சேகரிக்கத் தொடங்கினார். ஆறு மாதங்களுக்குப் பிறகு தன் சொந்த ஊரான கோட்டையூருக்குச் செல்ல நேரிட்டபோது தனது நண்பர் ஒருவரிடம் தான் சேகரித்திருந்த புத்தகங்களைக் கொடுத்து பாதுகாத்து வைத்திருக்குமாறு கூறிச்சென்றார். சென்னைக்குத் திரும்பிய முத்தையா தனது நண்பர் அப்புத்தகங்களைத் தவறவிட்ட செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தார். மீண்டும் அந்தப் புத்தகங்களைச் சென்னையின் மூர் மார்க்கெட்டில் தேடித்தேடி வாங்கிச் சேகரித்தார்.அன்றிலிருந்து நூல்களைச் சேகரிப்பதையே தன் இலட்சியமாகக் கொண்டு செயல்பட்டார்.

‘புத்தகங்கள் இல்லாத இல்லம் ஜன்னல்கள் இல்லாத வீட்டைப் போன்றது’ என்பது ஆங்கிலப் பழமொழி. ரோஜா முத்தையா தன் வீடு முழுவதும் புத்தகங்களை வாங்கிச் சேகரித்தார். புத்தகங்கள் தன் வீட்டை நிறைத்தபோது இரண்டு வீடுகளை வாடகைக்கு அமர்த்தி அதிலும் புத்தகங்களைச் சேகரித்து ஆராய்ச்சிக் கூடமாக்கினார்.

அரிய பணி:

புத்தகங்ளை வாங்குவதோடு நிறுத்திவிடாமல் அவற்றைப் படித்து, தலைப்பு வாரியாகப் பிரித்து அட்டவணைப்படுத்தி, படிப்பவர்களுக்குப் பயன்படும் வகையில் அவற்றை அடுக்கி வைத்தார். ஒவ்வொரு நூலிலும் உள்ள செய்திகளைத் தொகுத்து களஞ்சியமும் தயாரித்தார். இது அவருடைய சொந்த முறையைத் தழுவியது. அரிய புத்தகங்களும் கலைப் பொருட்களும் எங்கே கிடைத்தாலும் அவற்றை எல்லாம் வாங்கிச் சேகரித்தார். கோட்டையூரிலிருந்து அருகிலுள்ள காரைக்குடிக்குப் பலமுறை வரும் முத்தையா ஊருக்குத் திரும்பிச் செல்வதற்காக வைத்திருக்கும் பேருந்துக் கட்டணத்தைக்கூட நூல்கள் வாங்குவதற்காகச் செலவிட்டு விட்டு நடந்தே கோட்டையூருக்குத் திரும்புவார்.

அழியாத சொத்து:
ரோஜா முத்தையா தன் வாழ்நாளில் சேகரித்த புத்தகங்கள் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகம். இவற்றில் பழமையான தமிழ் இலக்கிய, இலக்கண நூல்களும், மருத்துவம், தத்துவம், வரலாறு, இசை, நாடகம், கலைக் களஞ்சியத் தொகுப்புகள், நாட்டுப்புறப் பாடல்கள், அகராதிகள் ஆகியவையும் அடங்கும். இதைத்தவிர இரண்டு லட்சம் சிறுகதைகள், ஐந்து லட்சம் தினச்செய்தி துணுக்குகள், புத்தரைப் பற்றிய 2,000 கட்டுரைகள், வெள்ளையரால் தடை செய்யப்பட்ட புத்தகங்கள், விலங்குகள் தொடர்பான 5,000 கட்டுரைகள், 25,000க்கும் மேற்பட்ட சஞ்சிகைகள், 15 லட்சம் பழமொழிகள், செட்டிநாட்டு நகரத்தார் சமூகச் சடங்குகள் பற்றிய ஏடுகள், 750 மரச்சிற்பங்கள், விற்பனைப் பத்திரங்கள், அடகுச்சீட்டுகள், 100 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நாடக - திரைப்படத் துண்டுப் பிரசுரங்கள் உள்ளிட்ட ஏராளமான சேகரிப்புகளைக் கொண்ட அரிய பெட்டகமாக இந்த நூலகம் திகழ்கிறது.
அரிய சில நூல்கள்:
1705 இல் வெளியான சார்லஸ் டிரிலில் லோல்டின் ‘பியர்பதும் டெக்’ 1804- இல் வெளியான ‘கந்தர் அந்தாதி’ 1828-இல் வெளியான ‘போகர் வைத்திய நூல்வரிசை’ 1850- இல் வெளியான ‘மஸ்தான் பாடல்கள்’ 1857- இல் ஜி.யு. போப் அவர்களால் பதிப்பிக்கப்பட்ட ‘இலக்கண நூல்’ 1874- இல் வெளியான ‘தமிழ் ஒக்கபிலரி’ 1885- இல் உ.வே. சாமிநாதய்யர் முதன்முதலாகப் பதிப்பித்த ‘ஸ்ரீமத்தியார்ச்சுனமான்மியம்’1890-இல் வெளியான ‘நளச்சக்ரவர்த்தி’ போன்றவை இவர் சேகரித்துள்ள அரிய நூல்களுள் சிலவாகும்.
ஆவணங்களைத் தேடி...

ரோஜா முத்தையா சேகரித்த நூல்கள் பற்றிய செய்தியை அறிந்த ஆய்வாளர்கள் தம் ஆய்வு தொடர்பான தரவுகளைத் திரட்ட கோட்டையூருக்குச் சென்றனர். அவர்கள் நூலகத்தைப் பயன்படுத்த இலவசமாக அனுமதிக்கப்பட்டது. பிறகு ஆய்வாளர்களுக்குப் பல்கலைக்கழகங்கள் வழங்கும் உதவித் தொகையில் ஒரு சிறுதொகையைப் பெற்று அதில் மதிய உணவும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்களும் நூலகத்தைப் பயன்படுத்திக் கொண்டனர். முத்தையா அவர்கள் நினைத்திருந்தால் பல நூல்களை எழுதி வெளியிட்டிருக்கலாம். ஆனால், அரிய புத்தகங்களைப் பாதுகாப்பதே தனது தலையாய கடமையாகக் கொண்டு செயல்பட்டார். அப்பணியிடையிலும் ‘தேள்கடி’ தொடர்பான மருத்துவநூல் ஒன்றை எழுதி வெளியிட்டார். சேகரித்த நூல்களைப் பாதுகாக்க ஒருவகைப் பூச்சி மருந்தைத் தெளித்து வந்தார். அதனை அடிக்கடி சுவாசிக்க நேர்ந்ததால் அவருக்கு நோய் ஏற்பட்டது. இந்நிலையில் தனது நூலகத்தைத் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்துக்குக் கொடுக்க எண்ணினார். அதற்கான முயற்சிகளை அப்போதைய தமிழக அரசு மேற்கொண்டது. ஆனால் அந்த முயற்சி ஏனோ வெற்றிபெறவில்லை.

சிகாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் சி.எஸ்.லட்சுமி என்பவர் தான் பயன்படுத்திய முத்தையா நூலகத்தின் சிறப்புகளைப் பற்றி தன் நண்பர்களிடமும் பல்கலைக்கழக நிர்வாகத்திடமும் எடுத்துக் கூறினார். பல்கலைக்கழக நிர்வாகம் முத்தையாவைத் தொடர்பு கொண்டு நூலகத்தைத் தருமாறு வேண்டியது. ஆனால் தான் அரும்பாடுபட்டுச் சேகரித்த அறிவுப் பெட்டகத்தை வெளிநாட்டுப் பல்கலைக் கழகத்திற்கு அளிக்க அவர் விரும்பவில்லை. தனது சேகரிப்புகள் தமிழகத்திற்கே பயன்பட வேண்டும் என விரும்பினார். விருப்பம் நிறைவேறாத நிலையில் அவரது உயிர் பிரிந்தது.

தமிழறிஞர்களை அவர்கள் வாழும் காலத்தில் மதிக்காத தமிழகம் ரோஜா முத்தையாவின் நூலகத்தை அரசுடைமை ஆக்க எந்த முயற்சியும் எடுக்காத நிலையில், சிகாகோ பல்கலைக்கழகம் ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்கி தங்கள் வசப்படுத்தியது. இருப்பினும் சிகாகோ பல்கலைக்கழகம், மொழி, பண்பாட்டு அமைப்பான மொழி அறக்கட்டளையின் கூட்டு முயற்சியால் முத்தையா நினைவாக ‘ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்’ என்ற பெயரில் சென்னை கிழக்கு முகப்பேரில் 1994 ஆம் ஆண்டு நிறுவி, இன்று சிறப்பாகச் செயல்படுகிறது. 1995 ஆம் ஆண்டு முதல் ஆய்வாளர்களின் பயன்பாட்டிற்குத் திறந்துவிடப்பட்டுள்ளது.

ஆராய்ச்சி நூலகத்தின் நோக்கம்:
தமிழ் நூல்கள், இதழ்கள், நூல்சாராப் பிறவகை ஆவணங்களுக்கு இந்த நூலகம் ஓர் ஆவணக்காப்பகமாகச் செயலாற்ற வேண்டும் என்பது தான் இதன் தலையாய நோக்கமாகும். தனிச்சிறப்புகள் மொழிசார்ந்த பண்பாட்டு ஆய்வு நூலகம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான முன்மாதிரியாகத் திகழ்கிறது. நூல் விவரங்களைத் தமிழிலேயே படிப்பதற்கான வகையில் கணிப்பொறி நூற்பட்டியலைக் கொண்ட முதல் நூலகமாக விளங்குகிறது. பிற இந்திய மொழியினரும் தமிழ் நூல்களின் விவரங்களை அவரவர் மொழியில் காணக்கூடிய வசதியும் உண்டு. இங்கு உள்ள நூல்களின் விவரங்களை உலகின் எந்த மூலையில் இருப்பவரும் பார்க்க வசதியாக 1996-ஆம் ஆண்டு முதல் இணைய வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பின்வரும் இணைய முகவரியில் விவரங்களைப் பார்க்கலாம்.

www.Lib.unchiago.edu/e/su/southasia/rmrl.html

நூல்களும் ஆவணங்களும் நவீன அறிவியல் முறைகளின் மூலம் ஆவணக்காப்பு நுண்படமாக எடுக்கப்படுகின்றன. பலப்பல ஆண்டுகளுக்கு இவை அழியாமல் இருக்கும். நுண்படமாக எடுக்கப்பட்ட நூல்கள் கணினி குறுந்தட்டுகளின் வடிவிலும் வெளியிடப்படுகின்றன.இந்நூலகத்தில் இல்லாத நூல்களைத் தேடி அவற்றை நுண்படமாகச் சேகரிக்க ஒரு தனித்துறை இயங்குகிறது. இத்துறை தற்போது மாவட்டவாரியாகப் பழம்பெரும் சேகரிப்புகளைக் கண்டறியும் கள ஆய்வில் ஈடுபட்டுள்ளது.