பிள்ளையார்பட்டியில் இத்திருவிழா பத்து நாள்கள் மிகச்சிறப்பாக நடைபெறுகின்றது. விநாயகர்
சதுர்த்திக்கு ஒன்பது நாள்கள் முன்பாகக் காப்புக்கட்டிக் கொடியேற்றித் திருவிழா தொடங்கப்படுகிறது.
ஒவ்வொரு நாள் இரவிலும் விநாயகருக்கு மூஞ்சுறு, சிம்மம், பூதம், கமலம், இடபம், யானை,
பெருச்சாளி, மயில், குதிரை வாகனங்களில் திருவீதியுலா நடைபெறும். கற்பக விநாயகருக்கு,
சதுர்த்தியன்று 18 படி அரிசிமாவினால் செய்யப்படும் கொழுக்கட்டை நிவேதனமாகப் படைக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் சுக்கிலபட்சத்தில் வருகிற சதுர்த்தியன்று, விடியற்காலையில்
எழுந்து நீராடி, பட்டாடை உடுத்தி, ரத்னகலச ஸ்தாபனம் செய்து, கும்பத்தில் விநாயகரை வணங்கி,
கரும்பு, விளா பழம், சர்க்கரை, பலாப்பழம் ஆகியவற்றை நிவேதனம் செய்து வழிபட வேண்டும்.
பகலில் ஒருவேளை உண்டு இரவில் பால் (அ) பழம் மட்டும் உண்டு விரதம் இருத்தல் வேண்டும்.
அன்று இரவில் சந்திரனைப் பார்க்கக்கூடாது. சதுர்த்தியன்று விரதம் இருந்து வரும் பக்தர்கள்
அதனை நிறைவு செய்யப் பிள்ளையார்பட்டி வருவர். ஓராண்டுச் சதுர்த்தி நோன்பு விரதத்தை
இங்கு நிறைவு செய்பவர்களுக்குக் கேட்ட வரம் கிடைக்கின்றது என்பது நடைமுறையில் கண்ட
உண்மையாகும்.
விநாயகர் சதுர்த்தி என்றதும் கொண்டாட்ட உணர்வு வருவதற்குப் பதில் இப்போதெல்லாம் வன்முறை
ஏற்பட்டுவிடுமோ என்ற பயமே மேலோங்குகிறது.
ஆயிரக்கணக்கான பிள்ளையார்களை கிணறுகளிலும், ஏரிகளிலும், குளங்களிலும், கடலிலும் கரைப்பதால்
சுற்றுச்சூழல் மாசுபடும் அபாயம் அதிகத்து வருகிறது. முன்பெல்லாம் களிமண்ணில் மட்டும்
தான் பிள்ளையார் உருவங்களைச் செய்தனர். தற்பொழுது பிளாஸ்ட்ரோ பாரீஸில் செய்த நச்சுத்தன்மையுள்ள
வண்ணங்கள், வார்னிசுகள் பூசப்பட்ட பிள்ளையார்கள் அதிகத்துவிட்டன. இதனால் நீர் மாசுபடுவதுடன்,
நீர் வாழ் உயிரினங்கள் அழியும் சூழல் ஏற்படுகிறது. உற்சவ மூர்த்திகள் வலம் வருதல் சக
உயிர்களை அழிக்கஅல்ல; மகிழ்விப்பதற்கே என்பதை மக்கள் உணரவேண்டும்.
|