குன்றக்குடி மலை இரண்டு பகுதிகளாகத் திகழ்கின்றது. ஒன்று மலைக்கோயில்; மற்றொன்று கீழைக்கோயில்.
கீழைக்கோயிலின் பெரும்பகுதிகள் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளன. இங்குத் தேனாற்று
நாதரும் அழகம்மையும் கிழக்கு நோக்கியவாறு எழுந்தருளியுள்ளனர். அருகில் கிழக்கு மேற்காகச்
சுந்தரேசுவரர், அண்ணாமலையார், மலைக் கொழுந்தீசர், சண்டேசர் ஆகிய நால்வரது குடைவரைக்கோயில்கள்
அமைந்துள்ளன. இக்குடைவரைக் கோயில்களில் 23 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. குன்றின் மேற்கே
ஞானியார் மலை உள்ளது.
மலையடிவாரத்தில் தோகையடி விநாயகர் கோயில் உள்ளது. மலையின் நுழைவாயில் தோகை வடிவமாதலால்
அதனருகில் வீற்றிருக்கும் விநாயகருக்குத் தோகையடி விநாயகர் என்று பெயர் வந்தது. இக்கோயிலின்
மேற்கே தண்டாயுதபாணி சுவாமி கோயிலும், முருகனின் வேலால் தோற்றுவிக்கப்பட்ட சரவணப் பொய்கையும்
அமைந்துள்ளன. பக்தர்கள் தோகையடி விநாயகரை வழிபட்ட பின்னரே மலைக்குச் செல்லுதல் வழக்கம்.
மலைக்கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டுகளின் இடையிடையே மண்டபங்கள் இடம்பெற்றுள்ளன.
படிக்கட்டின் உச்சியில் வல்லப விநாயகர் சன்னதியும், இடும்பன் சன்னதியும் உள்ளன. தெற்கு
நோக்கியுள்ள பிரதான வாயிலை இராசகோபுரம் அழகு செய்கிறது. இக்கோயில் ஒரே பிரகாரத்தைக்
கொண்டு விளங்குகிறது. இப்பிரகாரத்தில் அலங்கார மண்டபம், விசாலாட்சி சன்னதி, சோமாஸ்கந்தர்
சன்னதி, ஆறுமுகப்பெருமான் சன்னதி ஆகியவை உள்ளன.
இப்பிரகாரத்தின் தென்பகுதியில் சமய குரவர் நால்வருக்கும், சொர்ணகணபதிக்கும், வடபகுதியில்
குழந்தை வடிவேலன், நடராசர் முதலியோருக்கும் தனிச்சன்னதிகள் உள்ளன. அலங்கார மண்டபத்தின்
தூண்களில் மருது சகோதரர் சிற்பங்கள் காணப்படுகின்றன.
கருவறையில் சண்முகநாதர் ஆறு திருமுகங்களுடனும், பன்னிருகைகளுடனும் மயில் வாகனத்தில்
காட்சி தருகிறார். வலப்பக்கத்தில் வள்ளியம்மையும், இடப்பக்கத்தில் தெய்வானையும் தனித்
தனி மயில் மீது அமர்ந்து காட்சி தருகின்றனர். இத்திருக்கோலத்தை வேறு எங்கும் காண இயலாது.
இது கண்கொள்ளாக் காட்சியாகும்.
|