கரு வளர்க்கும் சேரி

கோயில் இல்லாத ஊரும், குழந்தையில்லாத வீடும் சிறக்காது. மானுட வாழ்வின் ஊற்றுக் கண்ணாகத் திகழும் மழலைச் செல்வங்கள், பெற்றோரின் எதிர்கால நம்பிக்கையாகவும் நிகழ்கால இன்பமாகவும் திகழ்கின்றனர். குழந்தைச் செல்வத்தின் அருமையை, வள்ளுவர், "குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்' என்று கூறுகிறார். தம்பதியர்களை வாழ்த்தும் பெயவர்கள் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க! என்று வாழ்த்துவது மரபு. அந்தப் பதினாறு வகைச் செல்வங்ககளுள் குறிப்பிடத்தக்கது நன்மக்களைப் பெறுதல். எனவே தான் வள்ளுவர் "மக்கட்பேறு' என்ற அதிகாரத்தைப் படைத்துள்ளார்.

வளர்ந்து வரும் அறிவியல் உலகில் "செயற்கைக் கருத்தரிப்பு' (குளோனிங்) முறையில் குழந்தைகளை உருவாக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. இதற்கு பலநாட்டு மக்களிடமிருந்து எதிர்ப்புத் தேன்றிவரும் நிலையில், மக்கட்பேறு கிட்டாத தம்பதியர்களுக்குக் குழந்தை வரம் தந்து அருளாட்சி செய்யும் அகிலாண்டேசுவரி அம்மன் ஆலயம் ஒன்று கருவளர்சேயில் உள்ளது.

இவ்வூருக்கு அருகிலேயே திருக்கருகாவூர் எனும் திருத்தலம் ஒன்று உள்ளது. இங்குள்ள கர்ப்பரட்சாம்பிகை அம்மனை வேண்டினால் குழந்தைப்பேறு சுகமாக நடைபெறுவதாக இங்குவரும் பக்தர்கள் நம்புகின்றனர்.

அமைவிடம்:

கருவளர்சேரி அருள்மிகு அகிலாண்டேசுவரி அம்மன் கோயில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திற்கு அருகே உள்ளது. கும்பகோணத்திலிருந்து வலங்கைமான் செல்லும் வழித்தடத்தில் சுமார் ஏழு கி.மீ. தொலைவில் உள்ளது மருதாநல்லூர். இவ்வூருக்குக் கிழக்கே ஒரு கி.மீ. தொலைவில் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் கருவளர்சேரி கிராமம் அமைந்துள்ளது.

இறைவன் - இறைவி பெயர்க்காரணம்:

கயிலையில் நடைபெற்ற பார்வதி பரமசிவன் திருக்கல்யாணத்தைக் காண முப்பத்துமூன்று கோடி தேவர்களும் திரண்டனர். இதனால் பூமியின் சமநிலை தளர்ந்தது. உடனே அகத்திய முனிவரை தென்திசைக்கு அனுப்பினார் சிவபெருமான். இறைவனின் ஆணையை ஏற்றுத் தென்னகம் வந்த அகத்திய முனிவர் ஆங்காங்கே சிவலிங்கங்களை பிரதிட்டை செய்து வழிபாடு நடத்தினார். அவ்வாறு அகத்தியர் வழிபட்ட திருத்தலங்களுள் கருவளர்சேரியும் ஒன்று. அகத்தியர் பிரதிட்டை செய்து வழிபட்டதால் அவ்விறைவனுக்கு "அகத்தீசுவரர்' என்ற பெயர் ஏற்பட்டது. அகிலத்திலுள்ள அனைவரையும் காத்து அருள்புவதால் இங்குள்ள இறைவிக்கு அகிலாண்டேசுவரி என்ற பெயர் வந்தது.

திருக்கோயில் அமைப்பு:

அகத்தீசுவரர் உடனாய அகிலாண்டேசுவரி அம்மன் திருக்கோயில் கிழக்கு நோக்கிய சன்னதியுடையது. கருவறையில் இறைவன் இலிங்கவடிவில் காட்சி தருகிறார். இறைவன் சன்னதிக்கு இடது புறத்தில் அம்மன் சன்னதி உள்ளது. பரிவார தெய்வங்களாக பிள்ளையார், முருகன், அகத்தியர் - உலோபமுத்திர தேவி முதலானோர் இடம்பெறுகின்றனர்.

வழிபாட்டு நெறிமுறைகள்:

பல்வேறு இடங்களிலிருந்தும் மக்கள் குழந்தை வரம் வேண்டி சோதிடர்களின் ஆலோசனைப்படி இக்கோயிலில் வந்து வழிபாடு செய்து வருகின்றனர். கோயில் நடை காலை எட்டு மணி முதல் மாலை எட்டு மணி வரை திறந்திருக்கும். தினமும் நான்கு காலப் பூசைகள் நடைபெறுகின்றன.

குழந்தை வரம் வேண்டிவரும் தம்பதியர்கள் சுத்தமான நெய், எலுமிச்சை, மஞ்சள் (ஏழு உருண்டை), அருச்சனைப் பொருட்கள் முதலியவற்றை வாங்கிவரவேண்டும். பக்தர்களின் பொருளாதார வசதிக்கேற்ப புனுகுசட்டம், சாம்பிரானி தைலக்காப்பு போன்ற அபிடேகப் பொருட்களையும் வாங்கி வருகின்றனர்.

முதலில் அகிலாண்டேசுவரி அம்மன் சன்னதியின் படியை நெய்யால் மெழுகி பின் கோலமிட்டு முழு நம்பிக்கையுடன் வழிபடவேண்டும்.

மஞ்சள் உருண்டை அம்மனின் பாதத்தில் வைக்கப்பெற்று பக்தர்களிடமே வழங்கப்படுகிறது. இந்த மஞ்சள் உருண்டைகளை வீட்டிற்கு எடுத்துச் சென்று மகப்பேறு வேண்டிய பெண்மணி தினமும் குளிக்கும்போது உடம்பில் பூசிக்கொள்ளவேண்டும். அம்மனின் அருள் கிடைத்ததின் பயனாக சில பெண்கள் நான்காவது மஞ்சள் உருண்டை தேய்த்துக் குளிக்கும் காலத்திலேயே தாங்கள் கருவுற்ற செய்தியை கோயிலில் வந்து சொல்லி விடுகின்றனர். அம்மனின் திருமேனி சுயம்பாகத் தோன்றியதால் அபிடேக ஆராதனை கிடையாது.

அகிலாண்டேசுவரி அம்மனுக்கு சர்க்கரைப் பொங்கலும், அகத்தீசுவரருக்கு வெண் பொங்கலும் நிவேதனமாகப் படைக்கப்படுகிறது.

திருவிழாக்கள்:

ஆவணி மாதம் புனர்பூசத் திருநாளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. நவராத்தியின் போதும், மாசிமாதம் மகா சிவராத்திரியின் போதும் அம்மனுக்கு சிறப்பு அபிடேக ஆராதனை நிகழ்த்தப்பெறுகிறது. இதுரை நான்கு முறை (1945, 1957, 1976, 1994) குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளது.

இத்திருத்தலத்திற்கு வந்து வழிபாடு செய்து, குழந்தைப்பேறு பெற்ற பலர், தங்கள் வளைகாப்பின் போது அம்மனுக்கென்று தனியாக எடுத்து வைத்த வளையல்களையும், தொட்டில்களையும் எடுத்து வந்து காணிக்கையாகச் செலுத்திய காட்சி அம்மனின் அற்புத சக்தியை உறுதிப்படுத்துகின்றன.